இசையின் குருகள் ஆன குயில்கள்
இன்னிசை கச்சேரி நிகழ்த்த
ஓங்கி வளர்ந்து ஒய்யாரமாய் நிற்கும் மரங்கள்
தன் ஆயிரம் கைகளை அழகாய் வீச
பனியிடம் குளிரையும் பூவிடம் மணத்தையும்
கடனாய் வாங்கி
புயல் எனும் கோபத்தை தவிர்த்து
காற்று தென்றலாய் வீச
காலை கதிரவன் தன் கதிரை
கைகளாக விரிக்க
புற்கள் தன் மீது படர்ந்த பனித்துளிகளை
சிறு புதையல் என மறைக்க
அழகின் சிகரமாக மாறப்போகிறோம்
என கர்வம் கொண்ட மொட்டுகள்
பூவாய் மலர
வெள்ளை நரை தலையை கொண்ட ஓடைகள்
புது மெட்டுகளுடன் ஒலியை எழுப்ப
அழகின் வண்ணமாம் கருமை நிறத்தை
தனக்கே உரியதாய் கொண்ட காகம்
தன் இனிய குரலில் சங்கீதம் பாட
வட்ட கிண்ணத்தில் பதித்த முத்துக்கள் போல
மின்னும் அழகியான நிலவு
தன் காதலன் வருகைக்காக காத்திருக்க
அம்மாவின் நெற்றி பொட்டைப் போல
தன் முகத்தை சாந்தமாய் கொண்டு
தன் காதலி நிலவை சூரியன் பார்க்க
என் மகன் வந்து விட்டான் என்ற மகிழ்ச்சியில்
கீழ்வானம் அழகாய் சிவக்க
இதோ விடிகிறது விடியல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக