லிலியான் எனும் புறநகரொன்றில் நிகழும் ரயில் விபத்தொன்றின் பின்பாக அந்த சிறிய நகரில் மர்மமான சில சம்பவங்கள் அரங்கேற ஆரம்பிக்கின்றன. இச்சம்பவங்கள் அந்நகர மக்களின் அமைதியான வாழ்வை சீர்குலைப்பவையாக அமைகின்றன. இந்த ரயில் விபத்தைக் குறித்த ஒரு ரகசியத்தை வெளியே விடாது காத்து வருகிறது ஒரு சிறார் குழு….
அமைதியான ஒரு புறநகர், சூட்டிகையான ஒரு நண்பர் குழு, துவிச்சக்கரவண்டி உலாக்கள், சிறு நகரை சல்லடை போட்டுத் தேடும் ராணுவம், இவற்றின் மத்தியில் மறைந்திருக்கும் ஒரு மர்மம் போன்ற அம்சங்கள் Super 8 திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், இயக்கிய அருமையான படைப்பான E.T. யிலும் காணக்கிடைக்குமெனினும் சூப்பர் 8 திரைப்படமானது அதன் பார்வையாளர்களிற்கு வழங்கிடும் திரையனுபவம் அதனின்றும் வேறுபட்ட ஒன்றாகவே இருக்கிறது.
சூப்பர் 8, திரைப்படத்தின் முக்கிய கவர்ச்சி அம்சங்களாக அதன் இயக்குனர் J.J. Abrams திரையில் கொணர்ந்திருக்கும் மனித உறவுகள் குறித்த மென்மையான விபரிப்பு, உற்சாகம் துள்ளும் ஒரு சிறுவர் குழு அதன் நடவடிக்கைகள், இனிமையான பின்னனிப் பாடல்களுடன் அழகாக படமாக்கப்பட்டிருக்கும் 70களின் அந்திமம் என்பவற்றைக் கூறலாம்.
மைக்கல் பே மற்றும் ரோலன்ட் எமிரிக்தனங்கள் அற்ற திரைப்படத்தின் மர்மமுடிச்சுகூட ஒரு ஆறுதல் எனலாம். ஆனால் அந்த மர்மமுடிச்சை சூப்பர் 8ன் சிறப்புக்களில் ஒன்றாக கருத இயலாதவாறே அதன் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. குடும்ப உறவு, நட்பு, காதல் எனும் பிரதான வீதிகளில் நகரும் கதையை விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நகர்த்திட அந்த மர்மமுடிச்சு இயக்குனரிற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. அதில் பிரம்மித்திட ஏதும் இல்லை. இயக்குனரின் பிரதான இலக்கு ரசிகர்களின் மனங்களின் ஆழத்தில் துயிலும் மென்மையான உணர்வுகளிற்கு தூண்டில் போடுவதாகவே அமைகிறது. அவரின் அத்தூண்டில் சரியாகவே வீசப்பட்டிருக்கிறது எனலாம். மாறாக மர்மமுடிச்சிற்கும் மனிதர்களிற்குமிடையில் இருக்ககூடிய உறவானது மனதை தொடும் ஒன்றாக திரைக்கதையில் உருவாக்கப்படவில்லை.
தனக்கான ஒரு இடத்தை நோக்கி திரும்பல் அல்லது வீடு செல்லல் என்பதனை திரைக்கதையின் இழைகளில் ஒன்றாக கொண்டிருக்கிறது சூப்பர் 8. திரைப்படத்தில் வரும் சிறுவன் ஜோ, சிறுமி ஆலிஸ் ஆகிய இருவரும் தம் அன்னையரை இழந்தவர்கள். ஜோவின் தாய், தொழிற்சாலை விபத்தொன்றில் பலியாகிவிடுகிறாள். ஆலிஸின் தாய் தன் குடிகாரக் கணவனுடன் வாழ விரும்பாது அவனை விட்டு விலகிச் சென்று விடுகிறாள். தாயன்பு வெறுமையான இரு வீடுகளில் வாழும் இரு சிறார்களாக இவ்விரு பாத்திரங்களும் கதையில் காட்டப்படுகிறார்கள்.
ஜோவிற்கும், ஆலிஸிற்கும் அவர்களின் தந்தைகளிற்குமிடையில் இருக்கும் புரிந்துணர்வின்மை என்பதன் அரூப சுவர்களை கொண்டதாகவே அவர்கள் வீடுகளும் அமைந்திருக்கின்றன. இச்சுவர்களுடனான மோதலே இவ்விரு சிறுவர்களையும் அச்சுவர்களிற்கு வெளியே அல்லது அச்சுவர்கள் மறையும் தருணத்தில் உற்சாகமாக இயங்க செய்கின்றன. தம்மிருவர் இடையேயும் ஒரு அந்தரங்க வெளியை உருவாக்க உந்துகின்றன.
கனமான வெறுமை அழுத்தும் வீடுகளிலிருந்து விடுபட்டு நட்பையும், சாகசத்தையும், விருப்புடன் தேடி ஒடும் இந்த இரு சிறுவர்களும் ஒருவரை ஒருவர் நோக்கி ஈர்க்கப்படுவது என்பது இயல்பான ஒன்றாகவே தெரிகிறது. தம் தந்தைகள் இடும் தடைகளைத் தாண்டியும் அவர்கள் தம் சந்திப்புக்களை தொடர்வதற்கு காரணம் அந்த சந்திப்பில் அவர்கள் உணரும் அன்பான ஒரு வெளியே. இந்த அன்பும் அக்கறையுமே இறுதியில் ஆலிஸை காப்பாற்றுவதற்காக ஜோவை ஓட வைக்கிறது. அதற்காக அவன் எதிர்கொள்ள வேண்டிய ஜீவன் அவன் உயிரை எடுத்துவிடலாம் என்பதை அவன் அறிந்தே தன் நண்பர்களுடன் ஆலிஸை தேடிச் செல்கிறான்.
இவ்வாறான ஒரு நண்பர் குழுவில் இடம்பெறும் ஒவ்வொருவரையும் அவர்களின் குணாதிசயங்களுடன் ரசிக்க வைத்து விடுகிறார் இயக்குனர் ஏப்ராம்ஸ். அவர்கள் கூடும் போதெல்லாம் உற்சாகம் அங்கு கும்மியடிக்க ஆரம்பித்து விடுகிறது. சூப்பர் 8 கமெரா ஒன்றின் உதவியுடன் குறும்படத்தை இயக்கும் சார்ல்ஸ், வெடி நிபுணன் கேரி, குறும்படத்தில் டிடெக்டிவ் பாத்திரமேற்று நடிக்கும் மார்ட்டின் என ஒவ்வொருவரும் தனி ரகமாக சிரிக்க வைக்கிறார்கள். வயதிற்கு மீறிய உரையாடல்களை நிகழ்த்தி உயிரை வாங்கும் சிறுவர்கள் நிறைந்த படைப்புக்களில் இருந்து சூப்பர் 8 வேறுபடுவது ரசிகனிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான். இச்சிறார்களின் குடும்பங்கள் வழியேயும், நகரில் வாழும் மக்கள் வழியேயும் சிறிய புறநகர் சமூகமொன்றின் வேறுபட்ட மனநிலைகளையும் ஏப்ராம்ஸ் மெலிதாக காட்டியிருக்கிறார்.
திரைப்படம் நிறைவடைந்த பின்பாக சிறுவன் சார்லஸ் இயக்கிய திகில் குறும்படம் பார்வைக்கு வரும். அது அட்டகாசமான ஒரு அனுபவமாக அமையும். அதேபோல் சிறுமி ஆலிஸாக வேடமேற்றிருக்கும் Elle Fanning, சார்ல்ஸின் திரைப்பட காட்சி ஒன்றிற்கான ஒத்திகையில் தன் துணைவனான டிடெக்டிவ்வை பிரிய மறுத்து உரையாற்றுமிடத்தில் அவர் முகத்தில் வந்துவிழும் உணர்வுகளின் தொகுப்பு அசர வைக்கிறது.
இழப்புக்களின் பின்பாகவும் வாழ்க்கையை தொடர்ந்திட வேண்டியதன் அவசியத்தையும், அன்பான உறவு மற்றும் நட்பின் பெறுமதிகளையும் வலியுறுத்துவதாக சூப்பர் 8 திரைப்படத்தின் இறுதிப்பகுதி அமைந்திருக்கிறது. நெருக்கடிகள் சில வேளைகளில் உறவுகளை எதிர்பாராத வகைகளில் புதுப்பித்து தருகின்றன. கையெட்டும் தூரத்தில் இருந்த பாசத்தை எட்டியணைக்கவும், ஆரத்தழுவிடவும் செய்கின்றன. தனக்கான ஒரு கூட்டை நோக்கி திரும்பும் எந்த ஜீவனும் அங்கிருக்கும் வெறுமைக்காக வேகம் காட்டுவதில்லை. தனக்கென அங்கிருக்கும் அன்பும், பாசமுமே அதன் வீடு திரும்பலை காலகாலத்திற்கும் இனிமையான ஒரு அனுபவமாக ஆக்ககூடும். ரசிகர்களின் மனதில் ஏக்கம் சுற்றிப் புதைத்திருந்த ஒரு ரகசியமான வீடு திரும்பலை மீண்டும் மேற்பரப்புகளிற்கு இட்டு வருவதிலும், அவர்கள் தம் பால்யகால நினைவுகளை மீண்டும் அசைபோட வைப்பதிலும் சூப்பர் 8 சுபமாக வீடு திரும்பியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக